உணவின் ஆயுள் என்ன?

உணவின் ஆயுள் என்ன?

ஷெல்ஃப் லைஃப் அறிவோம்!
மழை வெள்ளம், பவர் கட் போன்ற பிரச்னை வரும்போதுதான், வீட்டில் என்னென்ன உணவுப் பொருட்கள் இருக்கின்றன என்பதே தெரியவருகிறது. ஃபிரிட்ஜைத் திறந்தால் காலையில் வாங்கிய தயிரில் இருந்து என்றோ வைத்த கத்திரிக்காய் வரை பல உணவுப் பொருட்களை வெளியே எடுக்கலாம்.

நாள், மாதக்கணக்கில் வீட்டில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள் நம்முடைய ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆரோக்கியமான வாழ்வுக்கும் முறையான உணவுப் பழக்கத்துக்கும் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், உணவுப் பொருட்களின் பயன்படுத்தத் தகுந்த காலம் ஷெல்ஃப் லைஃப்.

நாம் பயன்படுத்தும் ஒவ்வோர் உணவுப்பொருளுக்கும் ஆயுள் உண்டு. இதைத்தான் ‘ஷெல்ஃப் லைஃப்’ என்கிறோம். ஓர் உணவுப்பொருளை அதைப் பயன்படுத்த வேண்டிய காலம் கடந்த பிறகு பயன்படுத்துவதால், அதிலிருந்து கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போவதோடு, மோசமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களுக்கு ‘ஷெல்ஃப் லைஃப்’ எவ்வளவு என்பதையும், அவற்றை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும் பார்போம்.

ஷெல்ஃப் லைஃப் பற்றிய விழிப்புஉணர்வு என்பது, சமையலுக்காகப் பொருட்கள் வாங்குவதில் இருந்தே தொடங்குகிறது. ஷாப்பிங் செய்யும்போது, எப்போதும் வாங்கவேண்டியவற்றை எல்லாம் வாங்கிய பிறகு பில் போடும் முன் தயிர், சீஸ் போன்ற குளிரூட்டப்பட வேண்டிய பொருட்களை வாங்கவும். சிலர், கையில் எடுத்துவைத்துக்கொண்டு, அதன் பின்னர் ஒரு மணி நேரம் ஷாப்பிங் செய்வர். இது தவறு. இந்த இடைவெளிகூட பொருட்களின் ஷெல்ஃப் லைஃப்பைக் குறைப்பதோடு, விரைவில் கெட்டுப்போகவும் வழி செய்யும்.

கேனில் அடைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்களையோ அல்லது வேறு உணவுப்பொருட்களையோ வாங்கும்போது, கேனின் வெளிப்புறம் உள்வாங்கியோ அல்லது வளைந்து, நெளிந்தோ இருந்தால், உள்ளே இருக்கும் பொருள் கெட்டுப்போயிருக்க வாய்ப்புகள் அதிகம் அல்லது அவற்றின் ஷெல்ஃப் லைஃப் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

பால்

நமக்குக் கிடைக்கும் பாக்கெட் பால், பதப்படுத்தப்பட்ட பால்தான். ஃபிரிட்ஜில் ஒரே டெம்பரேச்சரில் வைத்திருந்தால், இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஃப்ரீசரில் வைத்து, பால் கட்டியாகும் வரை குளிரூட்டினால் இன்னும் ஓரிரு நாட்கள் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம், மின் தடையால் ஃபிரிட்ஜ் வேலை செய்யாவிட்டால், கெட்டுப்போக வாய்ப்பு அதிகம். அப்போது, உடனடியாகப் பயன்படுத்திவிடுவது நல்லது. காய்ச்சிய பாலை அதிகபட்சமாக ஒரு நாளுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். மேலும் சிறிது நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்கவும், கிருமிகளை அழிக்கவும், காய்ச்சும்போது பால் பொங்கிய உடனேயே அடுப்பை நிறுத்தாமல், பெரிய கரண்டியை பால் பாத்திரத்தில் போட்டு, ஒரு நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதனால், நுண்கிருமிகள் அனைத்தும் சாகும்.

முட்டை

முட்டை வாங்கும்போது லேசாகக் கீறல் இருந்தாலும் அவற்றைத் தவிர்க்க வேண்டும். எல்லா சமைத்த உணவுகளின் ஷெல்ஃப் லைஃப் போலவே முட்டைக்கும் 2-3 மணி நேரம்தான். சமைத்த சில மணி நேரங்களிலேயே பயன்படுத்திவிடுவது நல்லது. முட்டையைக் கழுவிய பிறகே வேகவைக்க வேண்டும். முட்டை விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கவும், நுண் கிருமிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும், வேகவைக்கும்போது தண்ணீர் கொதி வந்த பிறகே, முட்டையைத் தண்ணீருக்குள் போட வேண்டும். முட்டையைத் தண்ணீரில் முதலிலேயே போட்டு, பின்பு தண்ணீரைச் சூடேற்றினால், கிருமிகள் முட்டைக்குள் இறங்க வாய்ப்புகள் அதிகம்.

காய்கறிகள்

உருளை, பீட்ரூட், வெங்காயம் போன்ற வேர்க் காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. குளிரூட்டப்பட்டால் அதன் ஷெல்ஃப் லைஃப் குறைய வாய்ப்பு உண்டு. அவை, மண்ணுக்கு அடியில் இருக்கும்போது உள்ள அதே மாதிரியான சீதோஷ்ணம் இருப்பதால், சில நாட்களில் இவற்றின் வேர் வளரத் தொடங்கிவிடும். இதனால், பயன்படுத்த இயலாமல் போகும். வெளியில் வைத்தாலும் இவற்றை ஒரு வாரத்துக்குள் பயன்படுத்துவது நல்லது.

கீரை

கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா போன்றவற்றை ஃபிரிட்ஜில்வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். அதை கவரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கும்போது, கவரில் சிறுசிறு துளைகள் போட்டு வைத்தால், உள்ளே இருப்பவை அழுகாமல் இருக்கும். பச்சைமிளகாய் காம்பைக் கில்லி, ஒரு டப்பாவுக்குள் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் பயன்படுத்தலாம்.

மாவு

இட்லி, தோசை மாவை வீட்டிலேயே தயாரிப்பது நல்லது. அரைத்த மாவைச் சிறிது நேரம் வெளியில் வைத்துப் புளிக்க வைத்த பிறகே, ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்த பிறகு, மின் வெட்டு ஏற்பட்டால் மாவு விரைவில் புளித்துப்போக வாய்ப்பு அதிகம்.

தானியங்கள்

சிலர், சில பருப்பு வகைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கிறார்கள். இதில், தவறு இல்லை. வெளியில் சேமிக்கப்பட்டாலும், முறையாக மூடப்பட்டு புழுக்கள் புழுக்காமல் பார்த்துக்கொண்டால், ஒரு வருடம் வரைகூடப் பயன்படுத்தலாம்.

இறைச்சி

சிக்கன், மட்டன் மற்றும் மீன் போன்ற இறைச்சிப் பொருட்களை வாங்கிய உடனே சமைத்து உட்கொள்வது சிறந்தது. உபயோகப்படுத்தாவிட்டால், உடனே குளிரூட்டப்பட வேண்டும். பின்னர், தேவைக்கு வெளியே எடுக்கும்போது, உடனடியாகச் சமைக்கத் தொடங்காமல், அவற்றைக் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டுவைத்து, பின்பு எடுத்துப் பயன்படுத்தவும். இதுபோல, ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கப்படுபவற்றை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். சிலர் `பார்ஷியல் குக்கிங்’ என்று, இறைச்சியைப் பாதி வேகவைத்து, பிறகு ஃபிரிட்ஜில் சேமிக்கிறார்கள். சமைக்கப்பட்ட இறைச்சி வகைகளை உடனுக்குடன் சாப்பிடுவதுதான் நல்லது. வெளியில் வைக்கப்பட்டாலும், இரண்டு மணி நேரம் வரைதான் கெட்டுப்போகாமல் இருக்கும். சமைக்கப்பட்ட இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால், ஒரே ஒரு முறை மட்டும்தான் திரும்பவும் சூடு செய்து பயன்படுத்த வேண்டும். வேண்டுமானால், சிறு சிறு பாத்திரங்களில் பிரித்து வைத்துக்கொண்டு, தேவைக்கு ஏற்ப எடுத்து, சூடுபடுத்தலாம்.

ஷெல்ஃப் லைஃப் ஃபார்முலா 4

சுத்தம் செய் (Clean): எந்தப் பொருளாக இருந்தாலும், சமைப்பதற்கு முன்பு அதைச் சுத்தம் செய்வதில்தான் சமைத்த உணவின் ஆயுளும் ஆரோக்கியமும் இருக்கிறது. எனவே, சுத்தம் அவசியம்.

பிரித்து வை (Separate): சேமித்து வைக்கும்போது ஒரு காய் அழுகி இருந்தாலும் மற்ற காய்கறிகளும் விரைவில் அழுகிவிடும். அதனால், நல்ல காய்களை பிரித்துவைக்க வேண்டும். இது அனைத்து உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும்.

சமை (Cook): உணவுப் பொருட்கள், சரியான வெப்பத்தில் முறையாகச் சமைக்கப்பட வேண்டும்.

குளிரூட்டு (Refrigerate): மிச்சம் இருக்கும் சமைத்த உணவுகள் இரண்டு மணி நேரத்துக்கு மேல் வெளியில் இருக்கக் கூடாது. பிறகு பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் இருந்தால், ஃபிரிட்ஜில் வைத்துக் குளிரூட்டப்பட வேண்டும்.

ஷெல்ஃப் லைஃப் குறியீடுகள்

சீக்கிரம் கெட்டுவிடக்கூடிய பொருட்களின் மீது, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு முன்பு பயன்படுத்துவது நல்லது. `Best before’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தும் பொருட்கள் மீது, `இந்தத் தேதிக்குள் பயன்படுத்தினால் முழு ஆரோக்கியம் கிடைக்கும்’ என்று எழுதப்பட்டிருக்கும்.