பெண்களைக் காக்கும் பெருங்காயம்!

பெண்களைக் காக்கும் பெருங்காயம்!

பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால் கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது.

மாதவிடாய் சரியாக வராதவர்கள் அதிக ரத்தப்போக்கு இல்லாமல் லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி தள்ளி வரும் சினைப்பை நீர்க்கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல் வருந்தும் பெண்களுக்கு வாலேந்திர போளம் பெருங்காயம் மிளகு சேர்த்து அரைத்து இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும்.

குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம் லோசியா (Lochia) முழுமையாய் வெளியேற காயத்தைப் பொரித்து வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து பிரசவித்த முதல் ஐந்து நாட்கள் காலையில் கொடுப்பது நல்லது.

இந்த மூலிகை ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். தினம் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால் உடலும் குளிரும் கால்சியமும் பெருகும்.