குழந்தை ஆணா பெண்ணா

குழந்தை ஆணா பெண்ணா..?!


தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் ஒரு கரு உருவான சில வாரங்களிலேயே அந்தக் கருவின் பால் என்ன என்பதை அறிந்து விட முடியும். வேண்டியபடி ஆண் அல்லது பெண் குழந்தைக்கு உரிய மரபு அணுக் கூறுகள் உடைய விந்தினை பெண்ணின் கருப்பை முட்டையுடன் சேர்ப்பதன் வழி விரும்பிய குழந்தையைப் பெறலாம் என்று கூறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.எனினும் இந்த முயற்சிகள் எல்லாமே முழு வெற்றி அடைவதில்லை.பொருத்தமான அணுக்கூறுகளைச் சேர்த்து வைத்தாலும் அது முழுக் குழந்தையாக உருவாகும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. மொத்தத்தில் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பது விதிப்படி நடக்கும். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்று உரைக்கும் தமிழ்ப் பண்பாட்டில் இதற்கொரு வழி நிச்சயம் இருக்க வேண்டும். சித்தருள் பெருஞ் சித்தர் திருமூலர் சில வழிகள் காட்டியிருக்கிறார். அவர் தந்த திருமந்திரத்தின் கரு உற்பத்தி என்னும் பகுதியில் ஒரு பாடல்;

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகுமாகில் தரணி முழுதாளும்
பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

பொருள்: கரு தரிக்கும் காலத்தில் ஆணுக்கு வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் அதே சமயம் பெண்ணுக்கு இடது நாசியில் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்கும் உயிர் ஆணாகும். மாறாக பெண்ணுக்கு வலப்பால் மூச்சும் ஆணுக்கு இடப்பால் மூச்சும் மிகுந்து சென்றால் தரிக்கும் உயிர் பெண்ணாகும். இரண்டு பேருக்கும் ஒரே பக்க மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாகும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகும். அகப் பயிற்சியால் கட்டுப் படுத்தினால் கரு தரிக்காது. மூச்சு மிகுதல் என்றால் என்ன? மூக்கின் இரு ஓட்டைகளில் வலது பக்க ஓட்டை வல நாசி என்றும் இடது பக்க ஓட்டை இட நாசி என்றும் குறிக்கப்படும். நீங்கள் எந்த நேரத்தில் சோதித்துப் பார்த்தாலும் இரு நாசிகளுள் ஏதேனும் ஒன்றில் மட்டும்தான் மூச்சுக்காற்று மிகுந்திருக்கும். மற்றதில் மிகக் குறைவாக மூச்சு ஓடும். சற்று நேரத்துக்கொருமுறை இயற்கையாகவே இந்த மிகுந்த மூச்சு ஒரு நாசியிலிருந்து மற்றதுக்கு மாறும். ஒரு பக்கத்து நாசியை அடைத்து விட்டால் அடுத்த நாசியில் மூச்சு நடைபெறும். குழந்தை பெற விரும்பும் தம்பதியர் கரு தரிக்கும் வேளையில் உரிய மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் விரும்பிய வண்ணம் குழந்தை பிறக்கலாம் என்கிறது திருமந்திரம். நடைமுறையில் இதனைப் பின்பற்ற, தகுந்த யோக ஆசிரியரிடம் பயிற்சி பெற வேண்டும். பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி அவசியம். இன்னொரு வழிமுறை, தாய் மாதவிலக்கான நாளை முதல் நாள் என்றும் அடுத்த நாளை இரண்டாம் நாள் என்றும் தொடர்ந்து கணக்கிட்டு 5,7,9,11,13,15 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் குழந்தை தரிக்குமானால் அது பெண்ணாகும். 6,8,10,12,14,16 போன்ற இரட்டைப்படை நாட்களில் குழந்தை தரிக்குமானால் ஆணாகும். இங்கு ஒரு நாள் என்பது விடியற்காலை 5 மணி வாக்கில் சூரிய உதயத்தோடு தொடங்குவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மறுநாள் காலை 5 மணிவரை ஒரு நாள் நீடிக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு நாளைத் தொடங்கும் மேனாட்டு முறைக் கணக்கு இங்கு செல்லாது. இந்த வழிமுறை ஞானவெட்டி,பாகவதம் முதலிய பல பழைய நூல்களில் உள்ளது. இத்தகைய வழிகளைப் பின்பற்றியே அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள், பேரரசர்கள் போன்றோர் விரும்பிய வண்ணம் வாரிசுகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை கூற அருகிலேயே ஞானிகள்,யோகியர் இருந்திருக்கிறார்கள். திருமந்திரத்தின் கரு உற்பத்தி அதிகாரத்திலிருந்து இன்னுமொரு பாடல்.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

இங்கு கால் என்றால் (மூச்சுக்) காற்று என்று பொருள். கரு தரிக்கும் வேளையில் தந்தையின் வலது நாசியில் காற்று மிகுந்து வந்தால் குழவி (குழந்தை) ஆணாகும். இடது என்றால் பெண்ணாகும். மலக் காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறப்பார்கள். தாய்க்கும் தந்தைக்கும் மூச்சுக்காற்று ஒத்து வருமானால் பிறப்பது ஆணுமின்றி பெண்ணுமின்றி அலியாகும். இந்த மூச்சுக் காற்று இயற்கையாக சுமார் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு நாசியிலிருந்து இன்னொன்றுக்கு மாறும். உடனடியாக மாற்ற விரும்பினால் இடது புறம் சற்றுத் திரும்பி படுத்தால் போதும், மூச்சு வலது நாசிக்குச் சென்று விடும். வலப்பக்கம் சற்று நேரம் படுத்திருந்தால் மூச்சு இடது நாசியில் செல்லத் தொடங்கும். சிலர் ஒரு நாசித் துவாரத்தை பஞ்சு வைத்து அடைப்பதன் மூலம் மற்ற நாசியில் மூச்சு ஒடச் செய்வர். முறையாக யோகாசிரியர் ஒருவரிடம் பயிற்சி பெற்ற பின்னரே இத்தகைய வழி முறைகளைக் கையாளலாம். அதன்வழி பிரச்சினையைத் தவிர்க்கலாம்.