முகப்பருக்களுக்கு முடிவு கட்டனுமா

முகப்பருக்களுக்கு முடிவு கட்டனுமா...

 திருநீற்று பச்சிலை பயன்படுத்துங்க...!!!

நமது நாட்டில் மூலிகைகளுக்கு பஞ்சமே இல்லை... ஆனால் காலபோக்கில் அவற்றை பயன்படுத்துவதில்தான் ஓரவஞ்சனை.
சேற்றில் முளைத்த ஒரு சிறு செடி கூட... பெரிய பெரிய நோய்களையும் குணப்படுத்தும். அந்த வகையில் நாம் இன்று துளசி இனத்தைச் சேர்ந்த திருநீற்று பச்சிலை மூலிகையைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி இருக்கும் இடங்களை நாடி தேனீக்கள் ஓடிவரும்.
பூக்காத தாவரங்களையும் பூக்க வைக்கும்....
நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை.
பருக்கள் பட்டுப்போகும்
பருவ வயதுடையவர்களின் முக்கிய பிரச்னை முகப்பரு. குறிப்பாக இளம் பெண்கள் பருக்களை ஒழிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். டிவி விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட அழகுசாதன முகப்பூச்சுகளை வாங்கித் தடவுகிறார்கள். சிலர் பருக்கள் உடனே போக வேண்டுமே என்பதற்காக, அளவுக்கு அதிகமாக முகப்பூச்சுகளை தடவுகிறார்கள். இதனால் பரு இருந்த இடம் சூட்டினால் வெந்து, கருப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. பணத்தை கொடுத்து, பாதிப்பை ஏன் வாங்க வேண்டும்.
மனிதகுலம் வளமாக வாழத் தேவையான அனைத்தையும் படைத்த இயற்கை, இதற்கொரு தீர்வு வைத்திருக்காதா.. என்ன? அப்படிப்பட்ட தீர்வுதான் திருநீற்றுப் பச்சிலை. வீடுகளில், தொட்டிகளிலோ, புறக்கடையிலோ ஒரே ஒரு செடி இருந்தால் போதும், உங்கள் முகப்பரு பிரச்னை இட்ஸ் கான்... என ஆனந்த கூச்சல் இடுவீர்கள்.
இதன் இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி. இதன் விதைகள் குளிர்பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுகின்றன.
தேவையற்ற நீரை வெளியேற்றும் :
இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
ஆண்டி ஆக்ஸிடெண்ட்
பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.
இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இன்னும் பல நோய்களுக்கும் திருநீற்றுப் பச்சிலையில் தீர்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.
புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இது பயன்படுகிறது. அஜீரணத்தைப் போக்கும் குணமுடையது. படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்களை குணமாக்கும். இதன் தைலத்தை தனியாகவோ, எண்ணெயில் சேர்த்தோ தலைக்கு வைத்து குளித்தால் பேன், பொடுகு பறந்து
போகும்.