தலைமுடிப் பராமரிப்புக்கு சில யோசனைகள்

தலைமுடிப் பராமரிப்புக்கு சில யோசனைகள்… !

எலுமிச்சம் பழம் அளவு மருதாணி இலை விழுதில் இரண்டு டம்ளர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து, ஒரு நாள் வெயிலில் காய வைத்துவிட வேண்டும். பிறகு அடுத்த நாள் அதை நன்கு காய்ச்சி, மணல் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து எடுத்து கொண்டு தினமும் தலைக்கு தடவி வர முடி கருமை பெற்று நன்கு வளரும்.

தலைக்கு குளிக்கும் பொழுது ஷாம்பு உபயோகிக்காமல் சிகைக்காய் தூள் தேய்த்துக் குளிக்க வேண்டும். முடி மினுமினுப்பாக மாறும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காக்கைக் கொல்லி விதையை அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, பேன் தொல்லை நீங்கும்.

சாமந்திப் பூவை சூட்டிக் கொள்ள தலைமுடி உதிர்வு நிற்கும். பேன், பொடுகு தொல்லையும் நீங்கும்.

30 செம்பருத்திப் பூவை எடுத்து வந்து, நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, பாதுகாத்துக் கொண்டு தினமும் தலைக்கு தடவி வர, முடி நன்கு வளரும்.

1 கப் புளித்த தயிரில் நான்கு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர, முடி நன்கு செழித்து வளரும். மூன்று நாள்களுக்கு ஒருமுறை என்று நான்கு நாள்கள் குளித்தால் போதுமானது.

அதிமதுரப் பொடியைப் பாலில் குழைத்துக் கொதிக்க வைத்து நன்றாய் தளதள என்று கொதித்ததும் இறக்கி ஆற வைத்து இளம் சூட்டில் தலைக்குத் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து உடனே அலசி விட வேண்டும். வாரத்தில் இரண்டு முறை இதுபோன்று செய்து வர தலைமுடி உதிர்தல் நின்று நன்கு செழித்து வளரும். வழுக்கைத் தலையிலும் முடி வளரும்.