சீரகத்தின் மருத்துவ குணங்கள்

சீரகத்தின் மருத்துவ குணங்கள்

! ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்!!

சீரகம் நற்சீரகம், காட்டு சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என பல வகைப்படும். நற்சீரகமும் பெருஞ்சீரகமும் உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும். மற்றவை மருந்தாக மட்டுமே பயன்படும்.

சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தும்முன் அதை நச்சு நீக்கிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக சீரகத்தை சுண்ணாம்பு நீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து உலர்த்தி புடைத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டு மருந்துக்கு உபயோகப்படுத்துவது சிறந்த முறையாகும்.

சீரகத்தின் மருத்துவ குணங்கள்:-
கொத்தமல்லி விதையை போல சீரணிக்கும் சக்தியுள்ளது. நற்சீரகம் அசோசகம், வயிற்று வலி, பீலிகம் (கெட்டிப்பட்ட சளி), காசம் (எலும்புறுக்கிநோய்) போக்கும் காட்டு சீரகம் சர்மநோய்களை போக்கும்

பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு பீசைம், வயிற்று உப்புசம் ஆகியவற்றை போக்கும் கருஞ்சீரகம் மண்டைக் காப்பான், சிராய்ப்பீனிஸம், உட்சூடு, தலைநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.

மலத்தை கட்டும், புத்திக்கு பலன் தந்து ஞாபக சக்தியை பெருக்கும், கருப்பையை தூய்மைப்படுத்தும், விந்துவை வளர்க்கும், உடல்வலியும் வனப்பு பெறச்செய்யும் உணவுக்கு சுவையுண்டாக்கும், கண்களுக்கு குளிர்ச்சிதரும், வெறிநோய் (இன்சேன்டி) குணமாகும். குருதிக்கழிச்சல் என்னும் ரத்தபேதி குணமாகும்.

வாய்நோய்கள் அனைத்தையும் போக்கும்.
ஈரலை பலப்படுத்தும் கல்லடைப்பு எங்கிருந்தாலும் அதை வெளித்தள்ள உதவும். வாயுவால் ஏற்படுகின்ற நோய்கள், மூக்கு சம்பந்தப்பட்ட நோய்கள், பித்த சம்பந்தப்பட்ட நோய்கள், கண் சூடு, எரிச்சல் ஆகியவை குணமாவதுடன் உடல் பலம் பெறும். பித்த வாந்தி, சுவையின்மை, வயிற்றுவலி, வாய்நோய், கெட்டிப்பட்டசளி, ரத்தபேதி, இரைப்பு, இருமல், கல்லடைப்பு, கண் எரிச்சல் ஆகியவற்றை போக்கும்.

சீரகத்தில் நறுமணமும் காற்றில் ஆவியாக கூடியதும் மஞ்சள் நிறம் கொண்டதுமான எண்ணெய்த் தன்மை 2.5-4% வரை உள்ளது. இந்த எண்ணெயில் “குமிக் அல்ஸ்ரீஹைட்” என்னும் வேதிப்பொருள் 52% அளவுக்கு செரிந்துள்ளது. இந்த எண்ணெயில் இருந்து செயற்கையாக “தைமால்” என்னும் ஓமஉப்பு செய்யப்படுகின்றது.

சீரகத்தின் எண்ணெய் சீழையும் கிருமிகளையும் அழிக்க வல்லது. மேலும் சீரகத்தில் அடர் எண்ணெய் 10% வரையிலும் பென்டோசான்” 6.7! வரையிலும் அடங்கியுள்ளது.

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:-
சீரகத்தையும் மிளகையும் சமபங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு, பொடுகு, பேன் முதலியன ஒழியும்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சுமார் 30 கிராம் சீரகத்தை பொடித்து போட்டு நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வைத்திருந்து சிறிது நேரங்கழித்து குளித்துவர தலை உஷ்ணம் (காலச்சூடு), உடற்சூடு (உள்அனல்), மேகத்தழும்பு (தோல்நோய்கள்) ஆகியன குணமாகும்.

மிளகு, சீரகம் இரண்டையும் சமஅளவு சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு வெருகடி அளவு தேனில் குழைத்தோ அல்லது வெந்நீருடனோ சேர்த்து வாப்பிட அஜீரணத்தால் ஏற்பட்ட கடுமையான வயிற்றுவலி, பித்த மயக்கம், அரோசகம் (உணவின் மீது வெறுப்பு) ஆகியவை போகும்.

சீரகத்தை அரைத்து களியாகக் கிண்டி கட்டிகளின்மேல் வைத்துக் கட்ட கட்டியினால் ஏற்படும் உஷ்ணத்தையும், வலியையும் போக்குவதோடு வீக்கமும் வற்றும்.

சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத் துன்பம் தரும் வாந்தி குணமாகும்.

ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.

வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிடி) அதிகமானதால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை விழுங்க உடனே பலன் கிடைக்கும்.

சீரகம், இந்துப்பு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து மைய அரைத்து அத்துடன் சிறிது நெய்விட்டுச் சூடாக்கித் தேனீ கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி மறையும்.

ஒரு கரண்டி அளவு சீரகத்தைப் பொடித்து அதனோடு சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டு உடன் துணை மருந்தாக மோரை உட்கொள்ளச் செய்து உடல் வியர்க் கம் வரை வெயிலில் இருக்கச் செய்ய காய்ச்சல் தணியும்.

சீரகப் பொடியோடு கற்கண்டு தூள் சேர்த்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர குத்திருமல், வறட்டு இருமல் என வரும் எந்த இருமலும் தணியும்.

சீரகத்தை பொடித்து வெண்ணெயில் குழைத்துக் கொடுக்க எரிகுண்மம் என்னும் (அல்சர்) வயிற்று உபாதை குணமாகும்.

35 கிராம் போதிய அளவு உப்பு சேர்த்து அரைத்து நெய்விட்டு தாளித்து தேன் அல்லது சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்க வளி (வாயு) மற்றும் தீக்குற்றத்தால் வந்த நோய்கள் குணமாகும்.

சீரகத்தை 50கிராம் அளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து நல்ல வெல்லம் 20 கிராம் அளவுக்கு சேர்த்துப் பிசைந்து ஒரு புதுச்சட்டியின் மேல் அப்பி வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு 500மி.கி அளவுக்கு இரண்டு வேளையும் சாப்பிட்டு வர வெட்டை என்கிற உடற்சூடு, கைகால் குடைச்சல், எரிச்சல், குலைஎரிச்சல் முதலியன குணமாகும்.

சீரகத்தைப் பொன்னாங்ககண்ணிச் சாற்றில் ஊற வைத்து பின் காய வைத்து அரைத்த பொடி 4 கிராம் அளவும், சர்க்கரை 2 கிராமும் சுக்குத் தூள் 2 கிராமும் சேர்த்துக் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர காமாலை வாயுத் தொல்லைகள், உட்காய்ச்சல் தீரும்.

சீரகம், ஏலம், பச்சைக்கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து அதன் எடைக்குச்சரி எடை சர்க்கரை சேர்த்து வைத்துக் கொண்டு அந்தி சந்தி என இருவேளை ஒருகரண்டி அளவு சாப்பிட்டு வர மந்தம், வாயு, ரத்த அழுத்தம் சமனாகும்.

5 கிராம் சீரகத்தோடு 20கிராம் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்துவிட வயிற்றுப் போக்கு குணமாகும்.

சீரகத்தை ஒரு கரண்டி அளவு திராட்சை பழச் சாற்றுடன் சேர்த்துக் குடிக்க உயர் ரத்த அழுத்தம் குறையும்.

சீரகத்தோடு இரண்டு வெற்றிலை 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு பின் குளிர்ந்த நீர் ஒரு டம்ளர் சாப்பிட வயிற்றுப் பொருமல் வயிற்று வலி குணமாகும்.

சீரகத்தோடு கீழாநெல்லி சேர்த்து அரைத்து எலுமிச்சை ரசத்தில் சேர்த்து குடித்து வர கல்லீரல் கோளாறு காணாமல் போகும்.

மஞ்சள் வாழையோடு 5 கிராம் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.