மூலநோய், வாய்ப்புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி

மூலநோய், வாய்ப்புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி..!!

வாய்ப்புண் எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடியதுதான். வயிற்றுகோளாறு, வாயு தொல்லை, அலர்ஜி போன்ற தொல்லையால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வாய் பகுதியிலுள்ள மென்மையான தோல் பகுதியில் வாய்ப்புண் ஏற்படுகிறது.

வாய்புண் வந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். எந்த உணவையும், இயல்பாக சாப்பிட முடியாது. புண் உள்ள பகுதியில் உணவுப்பொருட்கள் படும் போது வலியும், எரிச்சலும் ஏற்படும்.
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் தொந்தரவாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை, இது அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, வைட்டமின் பி12, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகிறது.

வாய்ப்புண் வருவது ஏன்?

மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கிறது. பிரசவ காலங்களிலும், இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பெண்களுக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறது.

முரட்டுத்தனமாக பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படும். வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள், வாய்ப்புண்ணை உருவாக்கும்.

அதிகம் உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் வரக்காரணமாகிறது. மேலும் முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை, அதிகம் சாப்பிடுதல், புகைப்பிடித்தல் ஆகியவையும் காரணமாகிறது.

சில தரம் குறைந்த பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் வரும்.

தடுக்கும் வழிகள்

சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மூலம், வாய்புண் வராமல் தடுக்கலாம். நல்ல உணவுப் பழக்கம், மிதமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது, நல்ல தூக்கம் ஓய்வு மூலம் தடுக்கலாம்.

மேலும், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்க கூடிய ஆன்ட்டி பாக்டீரியா மவுத்வாஷ் கொண்டு வாயைக் கொப்பளிப்பதன் மூலம் தடுக்கலாம். தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன் பல் துலக்குவதன் மூலம் வாய்ப்புண்ணை தடுக்க முடியும்.

என்ன மருந்து?

* தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் புண் ஆறும்.
* மிதமான சூடுள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால் வலி நீங்கும்.

* மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின், மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
* குறைந்தபட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில், குணமாகி விட வேண்டும். மேலும் வாய்ப்புண் தொடர்ந்தால் உடனடியாக பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

மணத்தக்காளி

* மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து வந்தால் வயிற்றுக்கோளாறு, வாய்ப்புண் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். இத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி ஏற்படும்.

சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். பருப்பு சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு 6 மில்லி வீதம் அருந்தலாம்.

மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோர்வை நோய் விரைந்து குணமாகும். கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது.
மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும். 11 மில்லி கிராம் வைட்டமின் சியும் இக்கீரையில் உள்ளன.
மூலநோய்க்கும், குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்தாக கூறப்படுகிறது.