நடைப்பயிற்சி - உடல்செய்யும் தவம் நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி - உடல்செய்யும் தவம் நடைப்பயிற்சி



வைகறை துயில் எழு என்ற சொல்லைக் கேட்கும்போதே மனத்துக்குள் ஒரு கசப்பு. அதிகாலை தூக்கத்தானே சுகமானது.
அந்தச் சுகத்தையும் கெடுத்துவிட்டால்? காலையில் எழுந்திரு! சூரிய நமஸகாரஞ் செய்! நடைப் பயிற்சி செய்! யோகாசனஞ் செய்! என்று, ஊரெங்கும் உபதேச மொழிகளே உலா வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் எத்தனை பேர் அதை கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நடைப்பயிற்சி செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நள்ளிரவில் வீட்டுக்கு வந்து விடியும் முன்னே எழுந்து வேலைக்குப் போகின்றவர்களால் எப்படி நடைப்பயிற்சி செய்ய முடியும்?

உள்ளம் செய்யும் தவத்தைப்போல உடல்செய்யும் தவம் நடைப்பயிற்சி! நடைப் பயிற்சி செய்யச் செய்ய உடல் உறுதி பெறும். உள்ளுறுப்புகளின் இயக்கம் சீராகும்.
நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு உடம்பு சுமையாகத் தோன்றாது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். எப்போது எல்லா நேரத்திலும் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. நடைப்பயிற்சிக்கும் விதி இருக்கிறது.

அதற்குரிய நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் நல்ல பயன் உண்டாகும். நடை பயிற்சி செய்தால் உடல் எடை குறையும். இளைஞர், முதியவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் நடைப் பயிற்சி செய்யலாம்.

‘எப்போதெல்லாம் நடைபயிற்சி செய்யலாம்?’ என்பது பொதுவாக எழுப்பப்படுகிற கேள்வி. சூரிய உதயத்துக்கு முன்பும் சூரிய மறைவுக்குப் பின்பும் நடைப்பயிற்சி செய்தால், உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கும். புத்துணர்வு பெறும்.
சூரிய உதயத்துக்குப் பின்பும் சூரிய மறைவுக்கு முன்பும் நடைப் பயிற்சி செய்தால் அது தசைப்பகுதியை மட்டுமே வலுவாக்கும்.
சூரிய உதயத்துக்கு முன்பு நடைப்பயற்சி செய்பவர்கள் கற்கள் பதிந்த பாதைகளில் அல்லது கற்கள் நிறைந்த பாதைகளில் நடக்க வேண்டும்.

சூரிய மறைவுக்குப் பின்பு நடைப்பயிற்சி செய்பவர்கள் புல்தரையில் அல்லது புற்கள் நிறைந்த வெளிகளில் நடக்க வேண்டும்.

கற்கள் நிறைந்துள்ள பாதைகளில் நடக்கும்போது காலின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள பதின்மூன்று வர்மப் புள்ளிகள் அமுக்கப்படுகின்றன. அதனால், உறக்கத்துக்குப்பின் செயல்பட வேண்டிய மிகமிக முக்கியமான உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்படத் தூண்டப்படுகின்றன.

பகல் முழுவதும் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்க வேண்டிய உறுப்புகளை மீண்டும் தூண்டக் கூடாது என்பதனால், சூரிய மறைவுக்குப் பின் புற்களின் மீது நடந்தால், வர்மப் புள்ளிகளுக்கு ஒத்தடம் இடப்படுவதுபோல அமைதி கிடைக்கும்.

உள்ளுறுப்புகளுக்கு அமைதி கிடைத்தால், இரவுப் பொழுது இனிமையானதாக இருக்கும். அவ்வாறு அல்லாமல், வெயிலில் நடைப்பயிற்சி செய்தால், நடைப்பயிற்சி உடற்பயிச்சியாக, உடம்பின் வெளிப்புறத்திலுள்ள தசைகள் நரம்புகளுக்குக் கொடுக்கப்படுகின்ற பயிற்சியாகவே இருக்கும்.
வெயிலில் செய்யப்படுகின்ற பயிற்சியினால் உடம்பிலுள்ள கொழுப்புச் சத்து குறையும். கலோரிகள் அதிகம் தேவைப்படும். உடல் எடை குறையும். மனத்தளர்ச்சி உண்டாகும்.

பயிற்சிக்குப்பின் ஓய்வும் தேவைப்படும். நடந்து செல்பவர்கள், சூரியன் தலைக்கு மேலே உச்சியில் இருக்கும் போது, தன்னுடைய நிழலின் நீளம் ஒரு அடி அளவு இருக்கும்போது, வெயிலில் நடக்க கூடாது.

அதேபோல், ஈரமான மண்ணில் நடக்கக் கூடாது! அதனால், நோய்க்கிருமிகள் பாதத்தில் படிந்து நோயை உருவாக்கலாம்.