குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த எளிமையான 10 வழிகள்!

குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த எளிமையான 10 வழிகள்!



''பள்ளிப் பாடப்புத்தகங்களை படிப்பதையே சிரமமாக நினைக்கும் குழந்தைகளுக்கு, மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது சவாலான விஷயம்தான். ஆனால், பெற்றோர் கொஞ்சம் மனதுவைத்தால், அந்த ஆர்வத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும்'' என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர், ப்ரீத்தா நிலா. அதற்கான 10 வழிகளையும் கூறுகிறார்.

* சிறு வயது முதலே குழந்தைகளுக்குப் பிடித்த விலங்குகள், பழங்கள், பொதுஅறிவு தகவல்கள் உள்ளிட்டவற்றை எளிமையான படக்கதைகளாக சொல்லிக்கொடுப்பது, அவர்கள் மனதில் நன்றாகப் பதியும். ஆரம்பக் கட்டத்திலேயே கருத்துள்ள விஷயங்களைப் படிக்கச் சொன்னால், குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதனால், அவர்களுக்குப் பிடித்தமான ஸ்பைடர்மேன், கார்ட்டூன் படங்கள், பிக்சர் கார்டுகள் வாயிலாக வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பியுங்கள். பின்னர், அவர்களாகவே ஆர்வமுடன் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

* தினமும் இரவு நேரங்களில் நேரம் ஒதுக்கி, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்தக் கதைகள், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு, விலங்குகள் பற்றியதாகவும் குழந்தைகளை மையப்படுத்திய நீதிக் கதைகளாகவும் சொன்னால், அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். முக பாவனைகளுடன், கை கால் நடன அசைவுகளுடன் கதைகளைச் சொல்லும்போது, குழந்தைகள் தினமும் ஆர்வமுடன் கதைகளைக் கேட்பார்கள்.

* நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து பிடித்த விஷயங்களைப் படித்து, படித்ததை மற்றவர்கள் முன்னிலையில் ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால், ஆர்வமாகப் படிப்பார்கள். இதனால், ஒருவர் கற்றுக்கொண்ட விஷயம், எளிதாக மற்றவர்களுக்கும் தெரியவரும். இத்தகைய கூட்டுமனப்பான்மை, அந்தக் குழந்தைகள் பெரியவர்களாக ஆகும்போது, குரூப் ஸ்டெடி போன்ற விஷயங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். தயக்கம், தடுமாற்றம் போன்ற குணங்களையும் விரட்டி அடிக்கும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாட்டு, அறிவியல், பொதுஅறிவு, சுற்றுலா என ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அத்தகைய துறை சார்ந்த, அத்துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் பற்றிய புத்தகங்கள், அவர்களின் வரலாறு சொல்லும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

* அழகாகக் காட்சிப்படுத்துவதும், அலங்கரிப்பதும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். வீட்டிலேயே அழகான வடிவில் ஒரு ரேக் அமைத்து அதில் குழந்தைகளுக்குப் பிடித்த புத்தகங்களைக் காட்சிப்படுத்தினால், புத்தகம் படிக்கும் பழக்கம் இயல்பாகவே வரும். மேலும், குழந்தைகள் ஒரு புத்தகத்தைப் படித்த பின்னர், அவர்கள் படித்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும்போது உற்சாகமாவார்கள்.

* தினமும் வாசிப்பு நேரம் எனக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்து, மற்றவர்களிடம் பகிரலாம். குழந்தைகள் படித்ததில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அப்படிச் செய்யும்போது அப்பா, அம்மாவே படிக்கிறார்கள். நம்முடன் சந்தோஷமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என ஆர்வமுடன் குழந்தைகளும் படிப்பார்கள்.

* தினமும் காலை நேரங்களில் செய்தித்தாளை படித்து முடித்ததும், முக்கியமான செய்திகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். பல விஷயங்களையும் அவர்களிடம் விவாதிக்கலாம். தொடர்ந்து குழந்தைகளை செய்தித்தாளைப் படித்து தங்களிடம் விவாதிக்குமாறு சொல்லலாம்.

* செய்தித்தாள்களில் பார்த்த, பயனுள்ள, பிடித்த படங்களுடன் கூடிய விஷயங்களைக் கத்தரித்து, தனி நோட்டில் ஒட்டிவைத்து, அவ்வப்போது பார்க்கச் சொன்னால், குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். அப்படியே நல்ல விஷயங்களைப் படிக்க ஆரம்பிப்பார்கள்.

* ஓய்வு நேரங்களில் குழந்தைகளை வெளியிடங்களுக்கு, சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் பார்த்த, ரசித்த, பிடித்த பயண விஷயங்களைக் கதையாகவோ, கவிதையாகவோ எழுதச் சொன்னால், ஆர்வமாக எழுதுவார்கள். அந்த எழுத்து, பயண அனுபவங்களைப் பெற்றோர் படித்து, ஊக்குவித்து அதுசார்ந்த புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்லலாம்.

* ஓய்வு நேரங்களில் அல்லது மாதம் ஒருமுறையாவது நூலகம் அழைத்துச்சென்று பெற்றோரும் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். குழந்தைகளையும் நூலக உறுப்பினராக்கி, அவர்களுக்குப் பிடித்த நூல்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கப் பழக்கப்படுத்தலாம்.

''மேற்கண்ட 10 வழிமுறைகளையும் குழந்தைகள் கடைப்பிடிக்க, பெற்றோர் நேரம் ஒதுக்கினால் மட்டுமே சாத்தியமாகும். தற்போது, பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகளும் கேட்ஜெட்டில் அதிகம் நேரம் செலவழிக்கிறார்கள். அது, குழந்தைகளின் கண்பார்வைத் திறனை பாதிக்கும். எனவே, பெற்றோர்கள் சுயகட்டுபாட்டுடன் இருந்து, குழந்தைகள் கண் எதிரில் புத்தகம் படித்தால்தான் அவர்களும் புத்தகத்தின் பக்கம் திரும்புவார்கள்