ஆவாரை!

ஆவாரை!

புராணங்களில் சொல்வதுபோல் ஏழு கடல், ஏழு மலைகளுக்கு அப்பால் கிடைப்பதல்ல மூலிகைகள். சாதாரணமாக, நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன் புன்னகைப்பவை... ஆவாரை. வறண்ட நிலத்தில் தான் வளர்ந்தாலும், மனிதர்களின் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை. இந்தச் செடி இருக்கும் இடங்கள்தான், உண்மையில் ஆரோக்கிய மையங்கள். இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலையும் மனித மனதுக்கு, செலவில்லாமல் கையருகே கிடைக்கும் இதன் அருமை தெரிவதில்லை. மனித சமுதாயத்துக்கு ஆவாரை அள்ளி அள்ளித் தரும் பலன்கள் சொல்லி மாளாது.

புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல்!

கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள், வெயிலின் சூட்டைத் தவிர்க்க, ஆவாரம் இலைகளை தலையில் வைத்துக் கட்டிக் கொள்வார்கள். இக்காட்சியை இன்றைக்கும் பார்க்கலாம். சூட்டிலிருந்து உடலைக் காத்து குளிர்ச்சியை அளிப்பதில் ஆவாரையின் பங்கு அலாதியானது. உலகை உலுக்கும் கொடிய நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் இரண்டுக்கும் எதிரான ஆற்றல் கொண்டது, ஆவாரை. அதனால்தான் உலகின் பல நாடுகளில் கேன்சருக்கான சின்னங்களில் ஆவாரம் பூ இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக, 'கனடா கேன்சர் சொசைட்டி’ சின்னத்தில்இதைத் தெளிவாகப் பார்க்கலாம். உலகின் பல நாடுகளில் விளையும் ஆவாரையைவிட, நம் மண்ணில் விளையும் ஆவாரைக்கு ஆற்றல் அதிகம் என்கிறார்கள்.

ஆவாரை நீர்!

இன்றைக்கு தேநீர் அருந்தாமல் நம்மால் இருக்க முடியவில்லை. அதனால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்தப் பலனும் இல்லை. பணம் செலவாவதுதான் மிச்சம். ஆனால், அதைவிட ருசியான, மிகமிக செலவு குறைந்த, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆவாரை நீரைப் பருகிப் பாருங்கள். பிறகு, அதை மட்டும்தான் பருகுவீர்கள். கையளவு ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து அருந்தினால்... உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், சரும நோய்களும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
'கிரீன் டீ’ என்ற பெயரில் இன்றைக்கு அதிகமாக விற்பனையாகும் தேநீரை விட, ஆயிரம் மடங்கு அற்புதமானது, ஆவாரை நீர். இது மட்டுமல்ல... ஆவாரை இலையைப் பறித்து, கல்லில் வைத்து அரை குறையாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, கண்களின் வழியே வெளியேறுவதை உணர முடியும். தலை முடி வளர, உடலை மினுமினுப்பாக்க, உடல் துர்நாற்றத்தைத் துரத்த... என அனைத்துக்கும் ஆவாரை பயன்படுவதால் இதனை, 'சகலநோய் தீர்க்கும் சர்வரோக நிவாரணி’ என்கிறார்கள்.

இவ்வளவு அற்புதங்களைச் செய்வதால்தான் 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டோ’ எனச் சொல்லி வைத்தார்களோ நம் முன்னோர்கள்.
இனி, ஆவாரையை ஆராதிப்போம்.

சர்க்கரை கட்டுக்குள் வரும்!
ஆவாரையின் மகத்துவத்தைப் பேசிய கோயம்புத்தூரைச் சேர்ந்த சுவாமி சுந்தரானந்தர், ''பூ, காய், இலை, பட்டை, வேர் ஆகிய ஐந்தும் சேர்ந்ததை 'ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்கிறார்கள். இவற்றை சம அளவு எடுத்து, பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால்... நீரிழிவு, உடல் சோர்வு, நா வறட்சி, தூக்கமின்மை போன்ற பல நோய்கள் குணமாகும். ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் காயவைத்து, பொடியாக்கி, கஷாயம் செய்து அருந்தி வந்தால்... சர்க்கரை கட்டுக்குள் வரும். ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை ஆகிய நான்கையும் சமஅளவு எடுத்து அரைத்து, முழங்காலுக்கு கீழே பூசி வந்தால்... நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால்பகுதி உணர்ச்சி பெறும்' என்றார்.