பிளீச் செய்யாமல் பளிச் முகம்

பிளீச் செய்யாமல் பளிச் முகம்!

அழகு நிலையங்களில் உடலில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்குவது, முகத்தைப் பிளீச் செய்து கொள்வது போன்ற செயல்களை இளம் பெண்களும், இளம் ஆண்களும் தற்சமயம் அதிகம் செய்து வருகின்றனர். அபாயகரமான ரசாயனக் கலவை கொண்ட இவற்றைப் பயன்படுத்தாமல் ரோம வளர்ச்சி குறைய பெண்கள் ஹார்மோன் சிகிச்சையைத் தவிர்க்கும்விதத்தில் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் உள்ளனவா?

பெண்களுக்கு முகம் மற்றும் உடலில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க சில எளிய விஷயங்களை ஆயுர்வேதம் கூறுகிறது.

* அகில் கட்டையை நன்றாகத் தூளாக்கி தயிரின் மேல் நிற்கக் கூடிய தண்ணீரில் குழைத்து தேவையற்ற ரோம வளர்ச்சிப் பகுதிகளில் தேய்த்து, சிறிது ஊறிய பிறகு கழுவி வர அவை உதிர்வதுடன் மேனி அழகு கூடும்.

ஊ கட்டை சந்தனத்தை இழைத்து அதில் குங்குமப் பூ மற்றும் சிறுநாகப் பூ பொடித்துச் சேர்த்துப் பூசி, சிறிது ஊறிய பிறகு அலம்பி விட, தேவையில்லாத மீசை, கிருதா போன்ற முடிகள் நாளடைவில் உதிர்ந்து விடும்.

* புங்கம் விதை, பச்சிலை, வாஸனக்கோஷ்டம் ஆகியவற்றைப் பொடித்து குளிர்ந்த நீரில் கரைத்து முகம் மற்றும் உடலில் பூசிக் குளிக்க, முடிகள் தேவையில்லாத பகுதிகளிலிருந்து உதிர்வதுடன் உடலிலிருந்து கெட்ட மணமும் அகலும்.

* நலங்குமாவு எனப்படும் பாசிப் பயறு, வெட்டிவேர், சந்தனம், விலாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, கார்போக அரிசி, பூலாங்கிழங்கு இவை அனைத்தையும் ஒரே அளவில் சேர்த்து இடித்த தூளை தயிர்த் தெளிவுடன் பூசிக் குளிக்க, தேவையற்ற முடிகள் உதிர்வதுடன் நல்ல மணத்தை உடலுக்குத் தரக்கூடியதாகும்.

* வசம்பு, கொத்தமல்லிவிதை, லோத்திரப்பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூச முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.

* கடுக்காய், மாம்பருப்பு, லவங்கப் பத்திரி, ஜடாமஞ்சி, நாவல் இலை, வாசனைக்கோஷ்டம், நெல்லிமுள்ளி, கோரைக் கிழங்கு ஆகியவற்றைப் பொடித்து தண்ணீரில் கலந்து உடலெங்கும் பூசிக் குளிக்க முக அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கும் முடிகள் உதிர்ந்து உடலில் மணமும் அழகும் கூடும்.

* மஞ்சிட்டி, லோத்திரப்பட்டை, ஆலம் விழுது, வாசனைக் கோஷ்டம், மஸýரப்பருப்பு, தினைமாவு, செஞ்சந்தனம் ஆகியவற்றைப் பொடித்து தண்ணீருடன் கலந்து முகத்தில் பூசி சிறிது ஊறிக் கழுவி வர, ரோம வளர்ச்சி நீங்குவதுடன் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் அழகாக இருக்கும்.

* மாதுளம்பட்டை, வேப்பம்பட்டை, ஏழிலம்பாலைப் பட்டை, லோத்திரப்பட்டை, கடுக்காய்த்தோல் ஆகியவற்றை நன்றாகப் பொடித்துத் துணியால் சலித்து சந்தனத்தூள் மற்றும் ஃபேஸ் பவுடருடன் கலந்து பூசி வர, பெண்களின் உடல்நாற்றம் நீங்கி தேவையற்ற முடியும் உதிரத் தொடங்கும்.

* மஞ்சிட்டி, பூங்காவி, மஞ்சள், மரமஞ்சள், கடுகு, பொடித்துத் தூளாக்கி, ஆட்டுப் பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஊறவைத்து முகம் கழுவி வர முகம் களையுடன் அழகாகவும் தேவையற்ற ரோமங்களையும் நீக்கிவிடும்.

* ஆண்கள் முகம் அழகாக இருக்க மஸýரப் பருப்பை பால் விட்டரைத்து முகத்தில் பூசி ஊற வைத்துக் கழுவ முகம் சிவந்து வனப்புடன் காணும்.

* தினமும் கடுகெண்ணையை மாலையில் முகத்தில் தடவித் தேய்த்துக் குளிக்க முகம் மென்மையும் மழமழப்பும் பெறும்.

* மிளகு, கோரோசனை இரண்டையும் அரைத்துப் பூச ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு நீங்கி முகம் அழகாக இருக்கும்.

* அதிமதுரம், லோத்திரப்பட்டையுடன் அவை அரிசியைப் பொடித்துச் செய்யப்பட்ட மென்மையானவற்றைக் கலந்து குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் பூசி 2 - 3 மணி நேரம் ஊற வைத்து அலம்பிவிட முகம் அழகாக மாறும்.

ஆண்மையைப் போற்றும் அஸ்வகந்தாதி லேஹ்யம், சித்த மகரத்துவஜம், அமுக்கரா சூரணம் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் ஆண்களுக்குத் திரண்ட உருண்ட வலுவான அகன்ற தோள்கள் அமையும். பெண்மையை வளர்க்கும் அசோககிருதம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்றவை மென்மையும் வனப்பையும் அழகையும் பெண்களுக்குத் தருபவை. செயற்கை முறைகளைத் தவிர்த்து இயற்கை நமக்களித்துள்ள இவற்றைப் பயன்படுத்தி அழகாக, மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வோம்.