தாய்ப்பால் சுரக்க சில குறிப்புகள்

தாய்ப்பால் சுரக்க சில குறிப்புகள் :

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னாளில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இதனால் பெரிதும் குறைகிறது. சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற தாய்ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்களிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.

தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.

மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும்.

குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில் புரதச்சத்து தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது.

தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம்.

தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை.

எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அறிவுரை, சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் டாக்ரர்கள்.

தமிழர்களின் சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் மூலிகையான பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி அதிகம் உள்ளது. தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது என்பது அனுபவ உண்மை. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

அதனால் போலும் எம்முன்னோர்கள் வேர்க்கொம்பு (திப்பலி), மிளகு, நற்சீரகம், உள்ளி போன்றவற்றை அரைத்து உறுண்டைகளாக்கி பனங்கட்டியுடன் பிள்ளை பெற்ற தாய்மாருக்கு சில நாட்களுக்கு உண்ணக் கொடுக்கின்றார்கள். அத்துடன் அவர்களுக்காக ஆக்கப்பெறும் பத்தியக் கறியிலும், சரக்குத்தூளும், பிஞ்சு முருக்கங்காயும், கீளி மீன்களும், புளுங்கல் அரிசியும் முக்கிய இடத்தைப் வகிக்கின்றன. சில ஊர்களில் கருவாடும் பத்தியக் கறிக்காக எடுத்துக் கொள்கின்றனர்.

பூண்டு தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ குறிப்புக்கள் சில..

உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.

தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.

மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.

சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும் மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடவும்.

காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது… அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும் வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.

ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.

ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.

பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்.

தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மாவுசத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிடவேண்டும். தானியங்கள், முளைகட்டிய தானியங்கள், உலர்ந்த கொட்டைகள், பால், பால் வகைப் பொருட்கள், மீன், ஆகியவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், அதிகமாகவுள்ள கேரட், பீட்ரூட், கோஸ் பச்சைக் காய்கறிகள் கீரை வகைகள், இவற்றில் ஒன்றையாவது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரசவித்த பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

இரும்புச்சத்து வைட்டமின், ஙி12 அதிகமுள்ள உணவுப்பொருட்களான அவல் கோதுமை சோயாபீன்ஸ், சுண்டைக்காய், கொத்தமல்லி, பேரீச்சம் பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, சீரகம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்கும்.

ஏலம்3 பங்கு, திப்பிலி 4 பங்கு, அதிமதுரம் 6பங்கு, ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து 12 பங்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து இஞ்சியின் மேல் தோல் நீக்கி உலர்த்திய தூள் 1 பங்கு சேர்த்து பாலுடன் கலந்து தினமும் ஒரு வேளை காலையில் உட்கொள்ள வேண்டும். நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம் நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும். 30-60 மி.லி அருகம்புல் சாற்றை தினமும் காலையில் குடித்து வர பால் சுரப்பு அதிகரிக்கும்.

அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாகச் குடிக்க வேண்டும். இதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும். ஆலம் விழுதும், ஆலம் விதையும் சம எடை எடுத்து பாலில் காய்ச்சி தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் குழந்தைகளுக்கு தேவையான பால் சுரக்கும்.