நீர்க்கடுப்பு நீங்க...

நீர்க்கடுப்பு நீங்க...
இன்றைய காலகட்டத்தில் தூய்மையான நீர், சுகாதாரமான உணவு என்பது அரிதாகிவிட்டது. இத்தகைய காரணங்களால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகின்றன. அவற்றில் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு சிறுநீர் வெளியேறாமை போன்றவை முக்கியமானது. அன்றாடம் பலர் இப்பாதிப்புகளால் அவதியுறுவதை நாம் கண்டு வருகிறோம். இதற்கு மருந்து மாத்திரைகளும் ஒரு காரணமாகும்.
இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம். இவற்றைத் தடுக்க அன்றே சித்தர்கள் பல வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.
நீர்க்கடுப்பு ஏற்படக் காரணங்கள்
உடலின் நீர்ச்சத்து குறைவே இதற்கு முக்கியக் காரணமாகும். ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதிப் பொருட்களை சிறுநீரகத்தின் நெப்ரான்கள் பிரித்து ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
பொதுவாக ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 167 லிட்டர் அளவு ரத்தத்தை வடிகட்டி பிரிக்கிறது. இதில் சுமார் ஒன்றரை லிட்டர் அளவு சிறுநீர்தான் வெளியேறுகிறது. மீதமுள்ளவை மீண்டும் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் சேர்ந்துவிடுகின்றன. இந்நிலையில் சிறுநீரின் அளவு குறைந்து கடினத் தன்மை அடைந்து வெளியேறும் போது நீர் எரிச்சல், நீர்கடுப்பு போன்றவை ஏற்படுகிறது. மேலும், மது, உற்சாக பானங்களால் கூட இது ஏற்படலாம். உடலிலிருந்து வெளியேறும் ரசாயன வேதிப் பொருட்களால்தான். இத்தகைய உபாதைகள் உண்டாகின்றன. உடல் சூட்டாலும், நீர்கடுப்பு ஏற்படும்.
நீர்கடுப்பு வராமல் தடுக்க
இளநீரைச் சீவி எடுத்து அதற்குள் சீரகம் 1 ஸ்பூன், சிறிதளவு சர்க்கரை, பாசிப்பயறு 10 கிராம் போட்டு ஓர் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் எடுத்து அவற்றை அரைத்து இளநீரில் கரைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஆறுவேளை என அருந்தி வந்தால் நீர்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சருமம் பொலிவு பெறும். கண்பார்வை தெளிவடையும்.
நீர் எரிச்சல் தீர நன்கு தண்ணீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
எலுமிச்சம் பழச்சாறு எடுத்து அதில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து அருந்துவது நல்லது.
பானகம் செய்து அருந்தலாம். அதாவது பனை வெல்லத்துடன் புளிக்கரைசலைச் சேர்த்து கரைத்து பானகமாக அருந்தலாம்.
சிறிதளவு வால்மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து அந்த பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு நீர்த்தாரை புண் போன்றவை நீங்கும்.
மண்பானையில் நீர் ஊற்றி அதில் விலாமிச்சம் அல்லது வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு நீர் எரிச்சல் நீங்கும். உடல் சூடு தணியும்.
முதல்நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த உளுந்து ஊறிய நீரை மட்டும் பருகி வந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீங்கும்.
பசலைக்கீரை நீர்க்கடுப்பைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே வாரம் இருமுறை பசலைக் கீரையை உண்டு வருவது நல்லது.
சீரகம், சோம்பு, வெந்தயம், சின்னவெங்காயம், கொத்தமல்லி விதை இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தயிர் அல்லது மோரில் கலந்து அருந்தி வந்தால் நீர்கடுப்பு உடனே நீங்கும்.
பூசணிக்காயை சாறு எடுத்து அதில் செம்பருத்திப் பூவை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சொட்டு சொட்டாக சிறுநீர் கழிதல் குணமாகும்.
====================================
நீர்க்கடுப்பு நீங்க வெங்காயம் !!
!வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது.
தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.
வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம். சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.
வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும்.
வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.