துத்தி மூலத்துக்கு கத்தி..!

துத்தி மூலத்துக்கு கத்தி..!

மூலிகைகள் என்றாலே, கிடைப்பதற்கரிய ஒரு பொருள் என்கிற எண்ணம்தான் அநேகரிடம் இருக்கிறது. ஆனால், அது தவறான கருத்து. உண்மையில், நம் கண் முன்னால், கைக்கெட்டும் தூரத்தில், கடந்து போகும் பாதையில் வீதியெங்கும் வியாபித்திருக்கின்றன, மூலிகைகள். அவற்றில், குறிப்பிடத்தக்க மூலிகை, துத்தி. தமிழகத்தில் இது இல்லாத இடமே இல்லை. நிஜக்காடுகள் இருக்கும் கிராமங்கள் தொடங்கி, கான்கிரீட் காடுகளாக மாறிவிட்ட சென்னை போன்ற பெருநகரங்களிலும்கூட முளைத்துக் கிடக்கிறது துத்தி. இதன் மருத்துவப் பலன்களைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.
இதய வடிவ இலைகள், மஞ்சள் நிறப் பூக்கள், தோடு வடிவ காய்கள் ஆகியவற்றைக் கொண்டது, துத்தி. இதன் இலைகளில் மென்மையான சுனை இருக்கும். இது உடலில் பட்டால் அரிக்கும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம். தெருவோரங்கள், தரிசு நிலங்கள், சுடுகாடுகள்... என அனைத்து இடங்களிலும் பார்க்கலாம். கிலோ கணக்கான காய்கறிகள், இறைச்சிகளில் உள்ள சத்துக்களை சில இலைகளில் அடக்கி வைத்திருக்கும் கீரைகள், இயற்கை மனித இனத்துக்கு அளித்த மகத்தான கொடைகளில் ஒன்று. தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்பவர்களை அணுக அஞ்சுகின்றன, பிணிகள். அந்த வகையில் துத்திக்கீரை அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. உடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி, உடலைத் தேற்றும் அதிசய மூலிகை, துத்தி.
'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்து வும்பெருகும் மெய்குளிரும்சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயாமதி முகத்தாய் செப்பு’ என்கிறது குணபாடம்.
'துத்திப் பூவை தினமும் உட்கொண்டு வந்தால் ரத்தவாந்தி, காசநோய் நீங்கும். விந்து அதிகமாக உற்பத்தியாகும். உடல் குளிர்ச்சியடையும்’ என்பது இச்செய்யுளின் சுருக்கமான பொருள். பசும்பாலில் ஒரு கைப்பிடி துத்திப் பூவைப் போட்டு வேகவைத்து குழையும் பதத்தில் கடைந்து... சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து உண்டு வந்தால், உடல் சூடு தணியும். விந்து கட்டும். ரத்தக் காசம் குணமாகும். துத்திப் பூவுடன் சுவைக்காக துவரம் பருப்பைச் சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம்.
துத்தி இருக்க, துன்பம் எதற்கு..?
அவசர யுகத்தில் உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிய பிறகு... விஞ்ஞானத்தின் உதவியால், அலைச்சல் குறைந்து, அமர்ந்த இடத்திலேயே அனைத்துப் பணிகளையும் செய்து கொள்கிறோம். 'நடக்க நடக்க நோய் தள்ளிப் போகிறது’ என்பது மூத்தோர் மொழி. ஆனால், நடை குறைந்து, இருக்கையிலேயே அதிக நேரம் இருப்பதால், முக்கால்வாசி பேருக்கு மூலநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி மூலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் மூலத்துக்கு சிகிச்சையளிப்பதாகச் சொல்லும் மஞ்சள் நிற விளம்பரச் சுவரொட்டிகளைப் பார்க்கலாம். இப்படிப்பட்ட மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு மூலத்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இன்னும் பெரிய மருத்துவமனைகளிலோ, 'அறுவை சிகிச்சை இல்லாமல், எண்டாஸ்கோபி மூலமாக மூலத்தை குணமாக்குகிறோம்’ எனச் சொல்லி பல ஆயிரங்களைக் கறக்கிறார்கள். உண்மையில் மூலத்துக்கு அறுவை சிகிச்சையும் தேவையில்லை. எண்டாஸ்கோபியும் தேவையில்லை. மூலத்தை அறுவை சிகிச்சை செய்ய, இயற்கை அனுப்பி வைத்துள்ள மருத்துவன்தான் துத்தி. அதனால்தான் 'துத்தி, மூலத்துக்கு கத்தி’ எனச் சொல்லி வைத்தனர், முன்னோர்.
மூலத்துக்கு முற்றுப்புள்ளி!
துத்தி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு கை பொறுக்கும் சூட்டில் வதக்கி... வாழை இலையில் வைத்து, ஆசன வாயில் துணியைக் கொண்டு கோவணம் போலக் கட்டிக்கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக இப்படி ஓரிரு நாட்கள் செய்து வந்தால், கடுப்பு நீங்கிவிடும். சிறிது சிறிதாக மூலமும் குணமாகிவிடும். சூட்டுக்கட்டிகளில் இதைக் கட்டினால், கட்டிகள் உடையும். இதை செய்வது சிரமம் என நினைப்பவர்கள், இரண்டு கை அளவுக்கு துத்தி இலைகளைப் பறித்து, தண்ணீரில் கழுவி, சிறிதாக நறுக்கி, சிறிது மஞ்சள்தூள், 10 சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு வதக்கி, சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து
10 நாட்களுக்கு இதை உண்டு வந்தால், மூலநோய் குணமாகும். இலையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து, சாதத்துடன் கலந்து உண்டால், மலம் இலகுவாகப் போகும்.
by தமிழ்நேசன்